Sunday, December 26, 2010

புத்தாண்டே...!புதுவரவே...!

புத்தாண்டே...!புதுவரவே...!

தாய்சொல் தட்டிடாமல்
தந்தைசொல் மீறிடாமல்
பெற்றவர்களுக்கோர் பாரமில்லாமல்
விரும்பி மணந்தவனுடன்
ஊரறிய சுற்றம்சூழ
மனமொத்த தம்பதியராய்
மகிழ்ச்சியுடன் இருக்கையிலே!

இருமனம் கலந்து
இல்லறசுகம் பெற்றபோதும்
அம்மாவென் றழைத்திடவே
குழவியெதுவும் இல்லாதநிலையில்
பிள்ளச்சோகம் மறக்கயெண்ணி
ஜவுளிக்கடைப் படியேறி
கணினிப்பெட்டியில் பில்லடித்து
பொழுதைப்போக்கிய வேளையிலே!

மாமன்மாமி மச்சினிச்சியும்
நாத்தனார்நாத்திக் கொடுமையிலும்
பிள்ளைச்செல்வம் இல்லையென
வெள்ளைமன மறியாதோர்
சொல்லும்சுடும் வார்த்தையையும்
சிரித்துப்பேசி மறந்துமே
யாருரைத்த போழ்திலும்
மனசொடிந்து போகாது
அனுசரித்துப் போகையிலே!

தாலிகட்டி மணமுடித்த
மணாளனவன் மலடியென
கூறும்துயர நேரத்திலே!
ஏன்பிறந்தோ மென்றெண்ணி
இதயமொடிந்து போனாளே!

புத்தாண்டு பிறந்தவுடன்
புதுமனிதன் தோன்றிடுவான்!
பிறக்கும்குழவியின் குரல்கேட்டு
கட்டியகணவனும் மகிழ்ந்திடுவான்
திட்டியஉறவுகளும் திருந்திடுமே
என்றேயெண்ணி என்தோழியும்...
காத்திருக்கும் புத்தாண்டே! புதுவரவே...!

நன்றிகள்!

தோழனின்
அன்புக்கரங்கள்
மீட்டிய
வீணையில்

மரபுப்பாக்கள்
இயல்புடன்
உதிர்ந்த
பொழுதினில்

பாசமலர்கள்
சரத்துடன்
பூத்த
நேரத்தினில்

இதயஅறைகள்
துடிப்புடன்
இசைத்த
அசைவினில்

ஒருதுளி
நட்புக்கென
ஒதுக்கி
மகிழ்ந்ததில்

மாணிக்கப்பரல்களுக்கு
ஓர் மகுடமாய்
ஜொலிக்கும்
உன்மனதில்

இந்த ஏழைக்கோர்
சிறுஇடம்
ஓரமாய்
ஒன்று
கிடைத்ததில்

படைத்த
கடவுளுக்கோர்
ஆயிரங்கோடி
நன்றிகளே...!

Friday, December 24, 2010

புத்தாண்டே ...!புதுவரவே..!

கடைக்கண் பார்வையில்

இகபரசுகம் தாங்கி

வல்லமை மிகுதியுடன்

அபயமளிக்கும் ஆதிலட்சுமியவள்

அபயமென்று வருவோர்க்கு

அபயமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!


ஜடா மகுடத்துடன்

சுகுமாறனை ஏந்தி

பூரண கும்பத்துடன்

சௌபாக்கியமளிக்கும் சந்தானலட்சுமியவள்

சகலசௌகர்யமும்வேண்டி வருவோர்க்கு

சௌபாக்கியமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!


கரங்கள் நான்கினில்

ஞானமுத்திரை தாங்கி

வெண்பட்டுப் புடைவையுடன்

அரசபோகமளிக்கும் கஜலக்ஷ்மியவள்

அரசபோகம்நாடி வருவோர்க்கு

யோகம்பலவுமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!


எண் கரங்களில்

சங்குசக்கரம் தாங்கி

தங்க மணிமகுடத்துடன்

வேண்டும்வரமளிக்கும் தனலக்ஷ்மியவள்

பொருள்வேண்டி வருவோர்க்கு

வேண்டும்வரமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!


எண் கரங்களில்

சூலம்கபாலம் ஏந்தி

எட்டுக்கைகளிலும் வெற்றியுடன்

நிர்க்கதியைப்போக்கும் வீரலக்ஷ்மியவள்

நற்கதிவேண்டி வருவோர்க்கு

வேண்டும்நலங்களளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..

இடக் கரத்தினில்

செழுங்கரும்பை ஏந்தி

ஆற்றோர எழிலழகுடன்

நிலவளமளிக்கும் தான்யலக்ஷ்மியவள்

நிலவளம்வேண்டி வருவோர்க்கு

வேண்டும்வளமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!


அழகிய முகந்தன்னில்

தாய்ப்பாசந்தனை ஏந்தி

இராஜலங்கார வடிவுடன்

துயரம்போக்கும் விஜயலக்ஷ்மியவள்

இன்பம்வேண்டி வருவோர்க்கு

வேண்டுமின்பமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!


நான்கு கரங்களில்

அழகியமலர் தாங்கி

கண்கவர் பொன்மேனியுடன்

வறுமைபோக்கும் மகாலக்ஷ்மியவள்

அறம்பொருள்வீடுபேறுவேண்டி வருவோர்க்கு

வேண்டும்வீடுபேறளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!

!


மூவுலகைல் இருப்போர்க்கும்

சந்ததியுடன் தனம்கொடுத்து

கலைகளில்வெற்றி தந்து

சகலசௌபாக்கியமும் வீரத்துடனருளி

அக்ஷ்டலக்ஷ்மியாம் உன்னாமம்சொல்வோர்க்கு

மோட்சத்துடன் முக்தியளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே...நீ புதுவரவே...!




Sunday, December 5, 2010

வருகவே…!…


இனிய பாடல்களைப்

பாடிச் செல்லும்

பறவைகளின் ஒலிகளுக்கிடையே!

சுகமான தென்றலை

வீசிச் செல்லும்

காற்றின் அசைவுகளுக்கிடையே!

கரிய நிறத்தினை

விட்டுச் செல்லும்

மேகங்களின் அரவணைப்புகளுக்கிடையே!

சுகந்த மணத்தைப்

பரப்பிச் செல்லும்

பூஞ்சோலைகளின் புன்முறுவல்களுக்கிடையே!

உன்னதமான அமைதியை

நாடிச் செல்லும்

அலைகளின் ஆர்ப்பாட்டங்களுக்கிடையே!

ஆனந்தமான இசையை

ஊடுருவிச் செல்லும்

மழையின் நீர்த்துளிகளுக்கிடையே!

ஒற்றை ரோஜாவாய்

வர்ண ஜாலங்களுடன்

விண்ணின் உயரத்தை

அளந்துசெல்ல வந்திருக்கும்

எனதருமை வானவில்லே வருகவே..!

Saturday, November 27, 2010

என் ஆசை மாமன் மகளே!

என் ஆசை மாமன் மகளே!

குழவிவயதில்

பஞ்சுமிட்டாய் கேட்டு

என்மனதில் பசுமையாய் நின்றவளே!

சிறுவயதில்

சில்க்குச்சட்டைக் கேட்டு

என்சிந்தையில் பூக்களாய்ப் பூத்தவளே!

பள்ளிவயதில்

பாடப்புத்தகம் கேட்டு

என்உள்ளத்தில் குடி கொண்டவளே!

சமைஞ்சவயதில்

சாமந்திப்பூக் கேட்டு

என்நெஞ்சத்தில் நீங்காஇடம் பெற்றவளே!

கல்லூரிவயதில்

கைபேசியைக் கேட்டு

என்கண்களில் தஞ்சம் புகுந்தவளே!

கல்யாணவயதில்

உன்காதலனைக் கேட்டு

என்இதயத்தை நொறுக்கிவிட்டாயடி செல்லமே!

விழியாத் தூக்கம்!

விழியாத் தூக்கம்!

தங்கமே!

நான் நினைத்த பொழுதெல்லாம்

மனம் கோணாமல்

திகட்டத் திகட்ட

இன்பம் கொடுத்தாயே!

நம் மழலைகளுக்குப் பருவத்திலே

அன்பு குறையாமல்

தாயன்பு என்றும்

கிடைக்கச் செய்தாயே!

என் தாய் தந்தையருக்கு

இயன்ற வரை

வேண்டிய பணிவிடைகள்

செய்து மகிழ்வித்தாயே!

என் அருகே விழித்திருந்து

சிரிக்கச் சிரிக்கப்

பேசி என்னைத்

தூங்க வைப்பாயே !

இன்று எங்களைத் தவிக்கவிட்டு

நீமட்டும் விழியாத்தூக்கம்

சென்று விட்டாயே!

ஏங்க வைத்த பொற்காலம்!

ஏங்க வைத்த பொற்காலம்!

காதல் தேவதையின்

விரும்பும் சாந்த குணத்தினிலே

கவரும் காந்தப் பார்வையினிலே

ரசிக்கும் இளமை மேனியினிலே

ருசிக்கும் இனிமைப் பேச்சினிலே

அணைக்கும் இன்பக் கரத்தினிலே

ஊடும் செல்லக் கோபத்தினிலே

கொடுக்கும் அன்பு முத்தத்தினிலே

செய்யும் சரச லீலைகளினிலே

மூழ்கிடும் காம வெள்ளத்தினிலே

துளிர்க்கும் அன்பு மொட்டினிலே

தந்திடும் பேரின்ப சுகத்தினிலே

தன்னையும் மறந்திட்ட காதலினிலே

பிண்ணியும் பிணைந்திட்ட வேளைதனிலே

நினைவும் வந்திட்டப் பொழுதினிலே

இத்துணையும் கற்பனையென அறிந்ததினிலே

எத்துணை ஏக்கமெந்தன் இதயத்தினிலே….!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

1. புதுமலர் தூவி புன்னகை ஏந்தி

வரவேற்கிறேன் இத்திருநாளை !

2. புகழ்மாலை சூடி பாமாலை பாடி

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

3 ஒளிவீசும் கதிரவனில் கலையுடன் திகழவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

4 அழகிய சந்திரனில் களிப்பாய் மகிழவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

5. பொழிந்திடும் மழைதனில் இனிமையை உணரவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

6. தித்திக்கும் பழமதில் தேனாய் சுவைக்கவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

7. எழிலான வசந்தமதில் ஏகாந்தமாய் இருக்கவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

8. பாடிடும் பறவைகளில் கீதமாய் இசைத்திடவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

9. சீறிடும் புயலதில் சாந்தமாய் இருந்திடவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

10. பொங்கிடும் கடலதில் முத்தாய் விளையவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

11. பூத்திடும் பூக்களில் மகரந்தமாய் கமழவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

12. ஆடிடும் மயிலதில் வண்ணத்தோகையாய் மிளிரவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

13. கூவிடும் குயிலதில் இராகமாய் ஒலித்திடவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

14. தென்மேற்குக் காற்றில் தென்றலாய் வீசிடவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

15. கொட்டிடும் அருவிதனில் பாய்ந்தோடும் ஆறாகவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

16. காமதேனுப் பசுவதனில் அமுதமாய் சுரந்திடவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

17. கொஞ்சிடும் கிளிகளதில் கொச்சைப் பேச்சாகிடவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

18. படமெடுத்தாடிடும் நாகமதில் மாணிக்கமாய் மின்னிடவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

Sunday, November 14, 2010

ரோஜாவின் ராஜா!

ரோஜாவின் ராஜா…..!


படம்

அலகாபாத்தில் உதித்த அற்புதமே!
மோதிலால் தந்திட்ட மோதகமே!
சொரூபராணி பெற்றிட்ட சொல்லோவியமே!
இரத்தினமெனப் பெயருள்ளடக்கிய நவரத்தினமே!

ஆங்கிலத்தாதி வளர்த்திட்ட அலங்காரமே!
மொழிகள்பல கற்றிட்ட புலமையே!
பீபியம்மை உருவாக்கிய ஞானசீலமே!
குதிரைச்சவாரியில் ஆசைகொண்ட குழந்தைமனமே!

அரபுக்கதைகள் கேட்டுமகிழ்ந்த கதைக்களஞ்சியமே!
அளவோடுபுசித்து வளமோடுவாழ்ந்த ஆரோக்கியமே!
இல்லையென்றோர்க்கு அள்ளிவழங்கிய வள்ளலே!
விடுதலைவேட்கையை வேரூன்றிய வித்தகமே!

குழந்தைகள்தினம் கொண்டாடவைத்தக் குலவிளக்கே!
ஆனந்தபவனில் அரசாண்ட கலையழகே!
இலண்டனில் கல்விபயின்ற இலக்கியமே!
பெர்டினண்டிப்ரூக்ஸை ஆசிரியராகப்பெற்ற பிரம்மஞானமே!

புத்தகங்களில் ஆர்வமுள்ளப் புகழோனே!
ஆன்மீகநெறிகள் போதிக்கப்பெற்ற ஆனந்தமே!
பதினைந்தாம்வயதில் கப்பலில்பயணித்த உல்லாசமே!
ஹாரோகல்லூரியில் கல்விபயின்ற பொற்றாமரையே!

புதுமைச்செய்திகளில் மகிழ்ந்த புதுமையே!
கேம்பிரிட்ஜில் தத்துவம்பயின்ற தத்துவமே!
பாரிஸ்டர் பட்டம்பெற்ற பெட்டகமே!
தந்தைக்காக அமைதிகாத்திட்ட சமாதானமே!

ரௌலட்சட்டத்தை எதிர்த்தப் பண்பாளனே!
பளிங்குச்சிலை கமலாவைமணந்த பொன்னாரமே!
அறப்போரில் பங்குபெற்ற அறக்காவலனே!
அண்ணலுக்காகத் தந்தையைச்சந்தித்தத் தங்கமே!

தந்தையுடன் சிறையிலிருந்த சரித்திரமே!
பூரணசுதந்திரம் கிடைத்திடவேண்டிய இலட்சியமே!
தண்டியாத்திரையில் தந்தையுடன்கலந்திட்ட தைரியமே!
பஞ்சசீலக்கொள்கையை உருவாக்கிய சாணக்கியமே!

ஐந்தாண்டுத்திட்டங்களைக் கொணர்ந்த ஆசியஜோதியே!
டிஸ்கவரிஆஃப் இந்தியாஎழுதிய எழுத்தாளனே!
சுதந்திர இந்தியாவின்முதல் தலைவனே!
வரிகொடாஇயக்கம் ஏற்படுத்திய அன்புள்ளமே!

அன்னைஇந்திராவை உலகுக்குநல்கிய நல்லுள்ளமே!
மகத்தானபணிகள் செய்திட்ட மனிதருள்மாணிக்கமே!
குழந்தைகளால்மாமா என்றழைக்கப்பட்ட மாமணியே!
மழலைகளின்மனதில் மலர்ந்திட்ட ரோஜாவின்ராஜாவே!

என்றும் உன்புகழ்பாடி மகிழ்ந்திடவே _ நித்தம்
உந்தன் பூக்கள்பூக்கின்றதே இம்மண்ணினிலே!


படம்

Wednesday, November 3, 2010

தீப ஒளியில்……!

தீப ஒளியில்……!

தீபாவளி வருகிறதே பட்டாசுமழை பொழிகிறதே

வெடிவெடிக்கும்நேரம் உளம்மகிழுமே ஆசைபெருகுமே இனிதாகவே !

[தீபாவளி]

இரயில்வெடியில் சரவெடியில் சிறுஇதயம் கதிகலங்கும்

சாட்டையெடுத்து மெர்க்குரியில்வைத்து விடியும்வரை ஒளியூட்டும் ! [இரயில்]

உலகமுழுவதும் மகிழ்ச்சிவெள்ளம் பார்க்கும்பொழுதிலே அடையுமின்பம்!

சங்குசக்கரத்திலே பூந்தொட்டியும் பூத்து ஒளிரும் ! [தீபாவளி]

அணுகுண்டுகள் வெடிக்கிறதே செவியறைகள் நடுங்கினவோ

புஸ்வானமும் ஆகியதால் வருந்திடுமோ அதுசுகமோ! [அணுகுண்டுகள்]

கம்பிமத்தாப்பினிலே ஒளிவெள்ளங்கள் தெரிகின்றதே வர்ணஜாலங்கள் !

தீப ஒளியில் மலர்வதுயார் மழலைமணிகள் ! [தீபாவளி]

Monday, October 4, 2010

மகாத்மா...!

குஜராத்திலே உதித்த முத்தல்லவோ

போர்ப்பந்தரிலே தோன்றிய பொன்னல்லவோ

இந்தியாவுக்கே வந்த இமயமன்றோ

அகிம்சையே அவன் வழியன்றோ ! [குஜராத்திலே]

கருணைமழை பொழிந்த வான்முகிலே

சாந்தஉள்ளம் கொண்ட சாத்வீகமே

மாந்தருக்குள் தோன்றிய மாமணியே

மாநிலத்தின் மொத்த அற்புதமே…! [குஜராத்திலே]

நல்வினை பொருந்திய நாயகமே

நடுநிலை பொதிந்தத் தாயகமே

கல்விச்செல்வம் தந்த நல்லறிவே

கவிதையே உந்தன் கற்பகத்தருவே….! [குஜராத்திலே]

சோம்பலை விடுத்தச் சித்திரமே

சத்தியத்தைக் கையாண்ட சாத்திரமே

செல்வமெல்லாம் சேர்ந்தப் பொக்கிஷமே

சொன்னசொல்லைக் காத்தக் காந்தியமே…! [குஜராத்திலே]

ஏழைகளின் துயர்துடைத்த எளியவனே

ஊழியருக்கு ஊழியனான உன்னதமே

கலையுள்ளம் கொண்டக் காவியமே

கொலைசெயல் மறுத்த மாதவமே…! [குஜராத்திலே]

தக்கசமயம் தந்துதவிய தைரியமே

மரணபயம் போக்கிய மந்திரமே

புண்படுத்தாத உள்ளம் கொண்டவனே

புண்ணியமே செய்த நல்லுணர்வே…….! [குஜராத்திலே]

தலைசிறந்த தலைவனானத் தங்கமே

உலகமெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்த உத்தமனே

பாரதம் பெற்றக் கலைமகனே

மகாத்மாவே எங்கள் தேசத்தந்தையே….! [குஜராத்திலே]

Thursday, September 30, 2010

நின் புன்னகையினில்....!

ஆதவனே ! நின்முகம் செங்கமலமாய்

ஆயிரங் கதிர்களுடனே ஒளிவீசிடுமே !

முழுமதியே ! நின்முகம் மங்கலமாய்

மஞ்ச ளழகியாய் பளீச்சிடுமே !

கருமேகமே ! நின்முகம் ஆனந்தமாய்

வான்வெளி யெங்கும் சூழ்ந்திடுமே !

இடியே ! நின்முகம் மத்தளமாய்

எட்டுத்திக்கும் டமாரமாய் முழங்கிடுமே !

மின்னலே ! நின்முகம் ஜோதியாய்

கண்களிடையே மின்னொளியாய் பிரகாசித்திடுமே !

மழையே ! நின்முகம் பகட்டாய்

பார்முழுதும் முத்துச்சாரலாய் பொழிந்திடுமே !

தென்றலே ! நின்முகம் வசந்தமாய்

வனங்கள்தோறும் வானளாவிப் பெருகிடுமே !

மலையே !நின்முகம் பாங்காய்

ஈரேழுலோகங்களையும் மிஞ்சிட உயர்ந்திடுமே !

ஆகாயத்தந்தையவன் மடியில் தவழும்

நிலமகளாம் பூமகளின் புன்னகையினால் .!!!

Sunday, September 26, 2010

பொன்னான பூமி....!

பொன்னான பூமி…!

தமிழகக் கேரள பொது எல்லையாம்

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் சென்று மகிழ்ந்தேனே !

தொலைவில் இருந்து பாடி மகிழும்

சோலைக் குயிலின் கீதம் இரசித்தேனே !

கார்மேகங் கண்டு களிப்புற்றே ஆடும்

வண்ண மயிலின் அழகைக் கண்டேனே !

தென்றலாய் வந்து தேனாய் இசைத்திடும்

தென்மேற்குக் காற்றின் இனிமை கண்டேனே !

செக்கச் சிவந்த இரும்புச் சோளம்

இதழ் விரித்துச் சிரிக்கக் கண்டேனே !

நிலத்தில் மறைந்து விளையும் பயிராம்

நிலக்கடலைச் செடியின் அழகைப் பார்த்தேனே !

கானகமெங்கும் சிறகையடித்துப் பறந்தே திரியும்

பச்சைக் கிளியின் மொழியைக் கேட்டேனே !

துள்ளித் திரிந்து ஓடிச் செல்லும்

புள்ளிமானின் விழிகள் கண்டு வியப்படைந்தேனே !

பசுமைக் கொழிக்கும் மரங்கள் அடர்ந்த

வனத்தைக் கண்டுப் புதுமை பெற்றேனே !

பருவத்தேப் பொழிந்திடும் சாரலைக் கண்டு

பணிந்தே செல்லும் ஓடையைக் கண்டேனே !

உலகமெல்லாம் ஏற்றுமதியாகும் வாசம் மிகுந்த

மலை ஏலக்காயின் நறுமணம் உணர்ந்தேனே !

சில்லெனப் பூத்து சிகப்பாய் விளைந்த

பன்னீர்க் கொய்யாப் பறித்து வந்தேனே !

உயரத்தில் காய்த்த கொடிக்கா மரத்தின்

பழத்தைத் தின்று ருசித்து வந்தேனே !

பெற்றவர் மகிழ்ந்திட பிறந்த ஊராம்

பொன்னான பூமி சென்று வந்தேனே !!!

Sunday, September 12, 2010

எங்கே?

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன
என்றால்
விவாகரத்தும்
விதவைக்கோலமும்
எங்கே நிச்சயிக்கப்படுகிறன!

காவியம்!

என்னவளே!

நீ
அடுப்படியை
வளையவரும்
அடிமையல்ல!
இனிமையான
சொற்களால்
கொஞ்சிப்பேசும் தேவதை!

நீ
குடும்பப்பாரத்தை
சுமக்கும்
சுமைதாங்கியல்ல!
பௌர்ணமியாய் வளர்ந்து
ஒளிவெள்ளமாய்
ஒளிரும் ஜோதி!

நீ
ஒன்றும் தெரியாத
கிணற்றுத்
தவளையல்ல!
அனைத்தும் அறிந்த
ஆண்டவனின்
அருந்தவப் புதல்வி!

நீ
தண்ணீரில்
வரையப்பட்ட
ஓவியமல்ல!
என்
இதயத்துள்
வடிக்கப்பட்ட
அழியாத காவியம்!!

அழைப்பு!

பாடி மகிழும் பறவைகளை
நாடி வரும் தென்றலே!

ஆடி மகிழும் மயில்களை
தேடிச் செல்லும் மேகமே!

ஓடி மகிழும் ஆற்றினை
சென்று அடையும் மழைகளே!

கூடி மகிழும் பூக்களை
உரசும் வண்ணப் பூச்சிகளே!

தேன் சிந்தும் இதழ்களை
வென்று வரும் கீதங்களே!

என்னவனின் நினைவுகளை
சுமந்து நிற்கும் சேதிதனை

விரைந்து சொல்ல வாருங்களேன்
எனது இனிய மன்னவனுக்கு!!!

பனித்துளிகள்!

ஆகாயத் தந்தை
பூமித் தாய்க்கு
தன்னுடைய
அன்பையும்
அரவணைப்பையும்
வெளிப்படுத்த
அனுப்பிவிடும்
தூதுவர்கள்
அல்லவோ
பனித்துளிகள்!

படக்…படக்…படக்…

கண்ணே!
நிலவைப் பார்த்து
உன் முகத்தைக்
கண்டு கொண்டேன்!
வானைப் பார்த்து
உன் பரந்த மனத்தைக்
கண்டு கொண்டேன்!
சூரியனைப் பார்த்து
உன் உள்ளத்தைக்
கண்டு கொண்டேன்!
தென்றலைப் பார்த்து
உன் சுவாசத்தைக்
கண்டு கொண்டேன்!
நட்சத்திரங்களைப் பார்த்து
உன் புன்னகையைக்
கண்டு கொண்டேன்!
உன் கொஞ்சும் விழிகளைப் பார்த்து
உன் விருப்பத்தைக்
கண்டு கொண்டேன்!
உன் மௌனத்தைப் பார்த்து
உன் சம்மதத்தைக்
கண்டு கொண்டேன்!
என் இதயத்தைத் தொட்டுப் பார்த்து
படக்...படக்...படக்..என
உன் இதயம்துடிப்பதைக்
கண்டு கொண்டேன்!

1.சொல்லின் ஈற்றில் ஒத்த ஓசை உள்ள கவிதை

உன்னைத்தான் எண்ணித்தான்
நெஞ்சம்தான் குளிர்ந்துதான்
வருடித்தான் சென்றதுதான்
சூரியனைத்தான் மறைத்துத்தான்
சந்திரனும்தான் உதித்ததுதான்
தென்றலைத்தான் நினைத்துத்தான்
என்னத்தான் என்னைத்தான்
மெல்லத்தான் அணைத்துத்தான்
கொஞ்சித்தான் மகிழ்ந்தான்.

சுதந்திரத்தை சுவாசிக்கும் நேரம்..!

சுதந்திர மாதாவே….!

பிறந்தவுடன் அழக்கூட விடாமல்
வாயில் சீனித்தண்ணீரை விட்டு
அடக்கி விடுகிறார்களடிக் கண்ணே !

குப்புறவிழுந்தவுடன் தவழக்கூட விடாமல்
மூலைமுடுக்கில் தலையணை யிட்டு
உட்காரவைத்துச் செல்கிறார்களடிச் செல்லமே !

உருண்டுபுரண்டு முட்டிமோதிநிற்கக்கூட விடாமல்
சக்கரவண்டியில் சுழல விட்டு
சதி செய்கிறார்களடிக் கண்மணியே !

எட்டிஎட்டிசுவர்பிடித்து எட்டுக்கூடவைக்க விடாமல்
நடைவண்டியினைக் கொடுத்து விட்டு
ஓட விடுகிறார்களடிப் பொன்மணியே !

ஓடியாடி விளையாடக்கூட விடாமல்
பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு
பாடம்படிக்கச் சொல்கிறார்களடி வைரமே !

கல்லூரிக்குச்சென்று காதலிக்கக்கூட விடாமல்
பட்டங்களை வாங்கி வந்து
பறக்கவிடச் சொல்கிறார்களடி இரத்தினமே !

கிடைத்தவேலையைச் செய்ய விடாமல்
வீட்டுவேலையைச் செய்யச் சொல்லி
நாள்முழுதும் கட்டாயப்படுத்துகிறார்களடி மாணிக்கமே !

பிடித்தவனை விட்டு விட்டு
சொன்னவனைக் கட்டிக் கிட்டு
வாழச்சொல்லி நச்சரிக்கிறார்களடி முத்தாரமே !

முத்தாகப் பிறந்த குழந்தையினை
மூன்றேமாதம் விட்டு விட்டு
சம்பாதிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்களடி செங்கரும்பே !

ஆசைப்பட்ட உடையினை வாங்கியுடுத்தவிடாமல்
வாங்கித் தந்த உடையினை
உடுத்தவேண்டு மென்கிறார்களடிக் கட்டழகே !

பெட்டியிலுள்ள நகையினை அணியக்கூடவிடாமல்
பூட்டுபெரிதாகப் போட்டு வைத்தே
வெளியில் செல்கிறார்களடிப் பொன்னாரமே !

விரும்பிச்சமைத்து வேண்டியதை உண்ணக்கூடவிடாமல்
விரும்பியதைக் கேட்டு சமைக்கச்
சொல்லி உண்கிறார்களடிப் பொற்கிளியே !

பிள்ளைகுட்டிகளைக் கரை சேர்த்து
பேரன் பேத்தி வந்தவுடன்
ஓரமொதுக்கிச் செல்கிறார்களடிச் செல்லழகே !

கணவன் விட்டுச் சென்றவுடன்
கண்ணேமணியாக வளர்ந்த பிள்ளைகள்

ஆசையென்ன? தேவையென்ன? விருப்பப்படி
வாழுங்கள் என்றுக்கூறிச் செல்வதில்

நியாயமென்ன? நீதியென்ன? மிச்சமென்ன?
மீதியென்ன? வாழ்க்கைமுழுதும் பறந்துவிட

உன்சுவாசக் காற்றைச் சுவாசிக்க
இன்னுமென்ன வேண்டு மெனச்
சொல்லடி என் தங்கமேத்தங்கம் !!!