Saturday, November 27, 2010

என் ஆசை மாமன் மகளே!

என் ஆசை மாமன் மகளே!

குழவிவயதில்

பஞ்சுமிட்டாய் கேட்டு

என்மனதில் பசுமையாய் நின்றவளே!

சிறுவயதில்

சில்க்குச்சட்டைக் கேட்டு

என்சிந்தையில் பூக்களாய்ப் பூத்தவளே!

பள்ளிவயதில்

பாடப்புத்தகம் கேட்டு

என்உள்ளத்தில் குடி கொண்டவளே!

சமைஞ்சவயதில்

சாமந்திப்பூக் கேட்டு

என்நெஞ்சத்தில் நீங்காஇடம் பெற்றவளே!

கல்லூரிவயதில்

கைபேசியைக் கேட்டு

என்கண்களில் தஞ்சம் புகுந்தவளே!

கல்யாணவயதில்

உன்காதலனைக் கேட்டு

என்இதயத்தை நொறுக்கிவிட்டாயடி செல்லமே!

விழியாத் தூக்கம்!

விழியாத் தூக்கம்!

தங்கமே!

நான் நினைத்த பொழுதெல்லாம்

மனம் கோணாமல்

திகட்டத் திகட்ட

இன்பம் கொடுத்தாயே!

நம் மழலைகளுக்குப் பருவத்திலே

அன்பு குறையாமல்

தாயன்பு என்றும்

கிடைக்கச் செய்தாயே!

என் தாய் தந்தையருக்கு

இயன்ற வரை

வேண்டிய பணிவிடைகள்

செய்து மகிழ்வித்தாயே!

என் அருகே விழித்திருந்து

சிரிக்கச் சிரிக்கப்

பேசி என்னைத்

தூங்க வைப்பாயே !

இன்று எங்களைத் தவிக்கவிட்டு

நீமட்டும் விழியாத்தூக்கம்

சென்று விட்டாயே!

ஏங்க வைத்த பொற்காலம்!

ஏங்க வைத்த பொற்காலம்!

காதல் தேவதையின்

விரும்பும் சாந்த குணத்தினிலே

கவரும் காந்தப் பார்வையினிலே

ரசிக்கும் இளமை மேனியினிலே

ருசிக்கும் இனிமைப் பேச்சினிலே

அணைக்கும் இன்பக் கரத்தினிலே

ஊடும் செல்லக் கோபத்தினிலே

கொடுக்கும் அன்பு முத்தத்தினிலே

செய்யும் சரச லீலைகளினிலே

மூழ்கிடும் காம வெள்ளத்தினிலே

துளிர்க்கும் அன்பு மொட்டினிலே

தந்திடும் பேரின்ப சுகத்தினிலே

தன்னையும் மறந்திட்ட காதலினிலே

பிண்ணியும் பிணைந்திட்ட வேளைதனிலே

நினைவும் வந்திட்டப் பொழுதினிலே

இத்துணையும் கற்பனையென அறிந்ததினிலே

எத்துணை ஏக்கமெந்தன் இதயத்தினிலே….!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

1. புதுமலர் தூவி புன்னகை ஏந்தி

வரவேற்கிறேன் இத்திருநாளை !

2. புகழ்மாலை சூடி பாமாலை பாடி

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

3 ஒளிவீசும் கதிரவனில் கலையுடன் திகழவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

4 அழகிய சந்திரனில் களிப்பாய் மகிழவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

5. பொழிந்திடும் மழைதனில் இனிமையை உணரவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

6. தித்திக்கும் பழமதில் தேனாய் சுவைக்கவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

7. எழிலான வசந்தமதில் ஏகாந்தமாய் இருக்கவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

8. பாடிடும் பறவைகளில் கீதமாய் இசைத்திடவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

9. சீறிடும் புயலதில் சாந்தமாய் இருந்திடவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

10. பொங்கிடும் கடலதில் முத்தாய் விளையவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

11. பூத்திடும் பூக்களில் மகரந்தமாய் கமழவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

12. ஆடிடும் மயிலதில் வண்ணத்தோகையாய் மிளிரவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

13. கூவிடும் குயிலதில் இராகமாய் ஒலித்திடவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

14. தென்மேற்குக் காற்றில் தென்றலாய் வீசிடவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

15. கொட்டிடும் அருவிதனில் பாய்ந்தோடும் ஆறாகவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

16. காமதேனுப் பசுவதனில் அமுதமாய் சுரந்திடவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

17. கொஞ்சிடும் கிளிகளதில் கொச்சைப் பேச்சாகிடவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

18. படமெடுத்தாடிடும் நாகமதில் மாணிக்கமாய் மின்னிடவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

Sunday, November 14, 2010

ரோஜாவின் ராஜா!

ரோஜாவின் ராஜா…..!


படம்

அலகாபாத்தில் உதித்த அற்புதமே!
மோதிலால் தந்திட்ட மோதகமே!
சொரூபராணி பெற்றிட்ட சொல்லோவியமே!
இரத்தினமெனப் பெயருள்ளடக்கிய நவரத்தினமே!

ஆங்கிலத்தாதி வளர்த்திட்ட அலங்காரமே!
மொழிகள்பல கற்றிட்ட புலமையே!
பீபியம்மை உருவாக்கிய ஞானசீலமே!
குதிரைச்சவாரியில் ஆசைகொண்ட குழந்தைமனமே!

அரபுக்கதைகள் கேட்டுமகிழ்ந்த கதைக்களஞ்சியமே!
அளவோடுபுசித்து வளமோடுவாழ்ந்த ஆரோக்கியமே!
இல்லையென்றோர்க்கு அள்ளிவழங்கிய வள்ளலே!
விடுதலைவேட்கையை வேரூன்றிய வித்தகமே!

குழந்தைகள்தினம் கொண்டாடவைத்தக் குலவிளக்கே!
ஆனந்தபவனில் அரசாண்ட கலையழகே!
இலண்டனில் கல்விபயின்ற இலக்கியமே!
பெர்டினண்டிப்ரூக்ஸை ஆசிரியராகப்பெற்ற பிரம்மஞானமே!

புத்தகங்களில் ஆர்வமுள்ளப் புகழோனே!
ஆன்மீகநெறிகள் போதிக்கப்பெற்ற ஆனந்தமே!
பதினைந்தாம்வயதில் கப்பலில்பயணித்த உல்லாசமே!
ஹாரோகல்லூரியில் கல்விபயின்ற பொற்றாமரையே!

புதுமைச்செய்திகளில் மகிழ்ந்த புதுமையே!
கேம்பிரிட்ஜில் தத்துவம்பயின்ற தத்துவமே!
பாரிஸ்டர் பட்டம்பெற்ற பெட்டகமே!
தந்தைக்காக அமைதிகாத்திட்ட சமாதானமே!

ரௌலட்சட்டத்தை எதிர்த்தப் பண்பாளனே!
பளிங்குச்சிலை கமலாவைமணந்த பொன்னாரமே!
அறப்போரில் பங்குபெற்ற அறக்காவலனே!
அண்ணலுக்காகத் தந்தையைச்சந்தித்தத் தங்கமே!

தந்தையுடன் சிறையிலிருந்த சரித்திரமே!
பூரணசுதந்திரம் கிடைத்திடவேண்டிய இலட்சியமே!
தண்டியாத்திரையில் தந்தையுடன்கலந்திட்ட தைரியமே!
பஞ்சசீலக்கொள்கையை உருவாக்கிய சாணக்கியமே!

ஐந்தாண்டுத்திட்டங்களைக் கொணர்ந்த ஆசியஜோதியே!
டிஸ்கவரிஆஃப் இந்தியாஎழுதிய எழுத்தாளனே!
சுதந்திர இந்தியாவின்முதல் தலைவனே!
வரிகொடாஇயக்கம் ஏற்படுத்திய அன்புள்ளமே!

அன்னைஇந்திராவை உலகுக்குநல்கிய நல்லுள்ளமே!
மகத்தானபணிகள் செய்திட்ட மனிதருள்மாணிக்கமே!
குழந்தைகளால்மாமா என்றழைக்கப்பட்ட மாமணியே!
மழலைகளின்மனதில் மலர்ந்திட்ட ரோஜாவின்ராஜாவே!

என்றும் உன்புகழ்பாடி மகிழ்ந்திடவே _ நித்தம்
உந்தன் பூக்கள்பூக்கின்றதே இம்மண்ணினிலே!


படம்

Wednesday, November 3, 2010

தீப ஒளியில்……!

தீப ஒளியில்……!

தீபாவளி வருகிறதே பட்டாசுமழை பொழிகிறதே

வெடிவெடிக்கும்நேரம் உளம்மகிழுமே ஆசைபெருகுமே இனிதாகவே !

[தீபாவளி]

இரயில்வெடியில் சரவெடியில் சிறுஇதயம் கதிகலங்கும்

சாட்டையெடுத்து மெர்க்குரியில்வைத்து விடியும்வரை ஒளியூட்டும் ! [இரயில்]

உலகமுழுவதும் மகிழ்ச்சிவெள்ளம் பார்க்கும்பொழுதிலே அடையுமின்பம்!

சங்குசக்கரத்திலே பூந்தொட்டியும் பூத்து ஒளிரும் ! [தீபாவளி]

அணுகுண்டுகள் வெடிக்கிறதே செவியறைகள் நடுங்கினவோ

புஸ்வானமும் ஆகியதால் வருந்திடுமோ அதுசுகமோ! [அணுகுண்டுகள்]

கம்பிமத்தாப்பினிலே ஒளிவெள்ளங்கள் தெரிகின்றதே வர்ணஜாலங்கள் !

தீப ஒளியில் மலர்வதுயார் மழலைமணிகள் ! [தீபாவளி]