Thursday, September 30, 2010

நின் புன்னகையினில்....!

ஆதவனே ! நின்முகம் செங்கமலமாய்

ஆயிரங் கதிர்களுடனே ஒளிவீசிடுமே !

முழுமதியே ! நின்முகம் மங்கலமாய்

மஞ்ச ளழகியாய் பளீச்சிடுமே !

கருமேகமே ! நின்முகம் ஆனந்தமாய்

வான்வெளி யெங்கும் சூழ்ந்திடுமே !

இடியே ! நின்முகம் மத்தளமாய்

எட்டுத்திக்கும் டமாரமாய் முழங்கிடுமே !

மின்னலே ! நின்முகம் ஜோதியாய்

கண்களிடையே மின்னொளியாய் பிரகாசித்திடுமே !

மழையே ! நின்முகம் பகட்டாய்

பார்முழுதும் முத்துச்சாரலாய் பொழிந்திடுமே !

தென்றலே ! நின்முகம் வசந்தமாய்

வனங்கள்தோறும் வானளாவிப் பெருகிடுமே !

மலையே !நின்முகம் பாங்காய்

ஈரேழுலோகங்களையும் மிஞ்சிட உயர்ந்திடுமே !

ஆகாயத்தந்தையவன் மடியில் தவழும்

நிலமகளாம் பூமகளின் புன்னகையினால் .!!!

Sunday, September 26, 2010

பொன்னான பூமி....!

பொன்னான பூமி…!

தமிழகக் கேரள பொது எல்லையாம்

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் சென்று மகிழ்ந்தேனே !

தொலைவில் இருந்து பாடி மகிழும்

சோலைக் குயிலின் கீதம் இரசித்தேனே !

கார்மேகங் கண்டு களிப்புற்றே ஆடும்

வண்ண மயிலின் அழகைக் கண்டேனே !

தென்றலாய் வந்து தேனாய் இசைத்திடும்

தென்மேற்குக் காற்றின் இனிமை கண்டேனே !

செக்கச் சிவந்த இரும்புச் சோளம்

இதழ் விரித்துச் சிரிக்கக் கண்டேனே !

நிலத்தில் மறைந்து விளையும் பயிராம்

நிலக்கடலைச் செடியின் அழகைப் பார்த்தேனே !

கானகமெங்கும் சிறகையடித்துப் பறந்தே திரியும்

பச்சைக் கிளியின் மொழியைக் கேட்டேனே !

துள்ளித் திரிந்து ஓடிச் செல்லும்

புள்ளிமானின் விழிகள் கண்டு வியப்படைந்தேனே !

பசுமைக் கொழிக்கும் மரங்கள் அடர்ந்த

வனத்தைக் கண்டுப் புதுமை பெற்றேனே !

பருவத்தேப் பொழிந்திடும் சாரலைக் கண்டு

பணிந்தே செல்லும் ஓடையைக் கண்டேனே !

உலகமெல்லாம் ஏற்றுமதியாகும் வாசம் மிகுந்த

மலை ஏலக்காயின் நறுமணம் உணர்ந்தேனே !

சில்லெனப் பூத்து சிகப்பாய் விளைந்த

பன்னீர்க் கொய்யாப் பறித்து வந்தேனே !

உயரத்தில் காய்த்த கொடிக்கா மரத்தின்

பழத்தைத் தின்று ருசித்து வந்தேனே !

பெற்றவர் மகிழ்ந்திட பிறந்த ஊராம்

பொன்னான பூமி சென்று வந்தேனே !!!

Sunday, September 12, 2010

எங்கே?

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன
என்றால்
விவாகரத்தும்
விதவைக்கோலமும்
எங்கே நிச்சயிக்கப்படுகிறன!

காவியம்!

என்னவளே!

நீ
அடுப்படியை
வளையவரும்
அடிமையல்ல!
இனிமையான
சொற்களால்
கொஞ்சிப்பேசும் தேவதை!

நீ
குடும்பப்பாரத்தை
சுமக்கும்
சுமைதாங்கியல்ல!
பௌர்ணமியாய் வளர்ந்து
ஒளிவெள்ளமாய்
ஒளிரும் ஜோதி!

நீ
ஒன்றும் தெரியாத
கிணற்றுத்
தவளையல்ல!
அனைத்தும் அறிந்த
ஆண்டவனின்
அருந்தவப் புதல்வி!

நீ
தண்ணீரில்
வரையப்பட்ட
ஓவியமல்ல!
என்
இதயத்துள்
வடிக்கப்பட்ட
அழியாத காவியம்!!

அழைப்பு!

பாடி மகிழும் பறவைகளை
நாடி வரும் தென்றலே!

ஆடி மகிழும் மயில்களை
தேடிச் செல்லும் மேகமே!

ஓடி மகிழும் ஆற்றினை
சென்று அடையும் மழைகளே!

கூடி மகிழும் பூக்களை
உரசும் வண்ணப் பூச்சிகளே!

தேன் சிந்தும் இதழ்களை
வென்று வரும் கீதங்களே!

என்னவனின் நினைவுகளை
சுமந்து நிற்கும் சேதிதனை

விரைந்து சொல்ல வாருங்களேன்
எனது இனிய மன்னவனுக்கு!!!

பனித்துளிகள்!

ஆகாயத் தந்தை
பூமித் தாய்க்கு
தன்னுடைய
அன்பையும்
அரவணைப்பையும்
வெளிப்படுத்த
அனுப்பிவிடும்
தூதுவர்கள்
அல்லவோ
பனித்துளிகள்!

படக்…படக்…படக்…

கண்ணே!
நிலவைப் பார்த்து
உன் முகத்தைக்
கண்டு கொண்டேன்!
வானைப் பார்த்து
உன் பரந்த மனத்தைக்
கண்டு கொண்டேன்!
சூரியனைப் பார்த்து
உன் உள்ளத்தைக்
கண்டு கொண்டேன்!
தென்றலைப் பார்த்து
உன் சுவாசத்தைக்
கண்டு கொண்டேன்!
நட்சத்திரங்களைப் பார்த்து
உன் புன்னகையைக்
கண்டு கொண்டேன்!
உன் கொஞ்சும் விழிகளைப் பார்த்து
உன் விருப்பத்தைக்
கண்டு கொண்டேன்!
உன் மௌனத்தைப் பார்த்து
உன் சம்மதத்தைக்
கண்டு கொண்டேன்!
என் இதயத்தைத் தொட்டுப் பார்த்து
படக்...படக்...படக்..என
உன் இதயம்துடிப்பதைக்
கண்டு கொண்டேன்!

1.சொல்லின் ஈற்றில் ஒத்த ஓசை உள்ள கவிதை

உன்னைத்தான் எண்ணித்தான்
நெஞ்சம்தான் குளிர்ந்துதான்
வருடித்தான் சென்றதுதான்
சூரியனைத்தான் மறைத்துத்தான்
சந்திரனும்தான் உதித்ததுதான்
தென்றலைத்தான் நினைத்துத்தான்
என்னத்தான் என்னைத்தான்
மெல்லத்தான் அணைத்துத்தான்
கொஞ்சித்தான் மகிழ்ந்தான்.

சுதந்திரத்தை சுவாசிக்கும் நேரம்..!

சுதந்திர மாதாவே….!

பிறந்தவுடன் அழக்கூட விடாமல்
வாயில் சீனித்தண்ணீரை விட்டு
அடக்கி விடுகிறார்களடிக் கண்ணே !

குப்புறவிழுந்தவுடன் தவழக்கூட விடாமல்
மூலைமுடுக்கில் தலையணை யிட்டு
உட்காரவைத்துச் செல்கிறார்களடிச் செல்லமே !

உருண்டுபுரண்டு முட்டிமோதிநிற்கக்கூட விடாமல்
சக்கரவண்டியில் சுழல விட்டு
சதி செய்கிறார்களடிக் கண்மணியே !

எட்டிஎட்டிசுவர்பிடித்து எட்டுக்கூடவைக்க விடாமல்
நடைவண்டியினைக் கொடுத்து விட்டு
ஓட விடுகிறார்களடிப் பொன்மணியே !

ஓடியாடி விளையாடக்கூட விடாமல்
பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு
பாடம்படிக்கச் சொல்கிறார்களடி வைரமே !

கல்லூரிக்குச்சென்று காதலிக்கக்கூட விடாமல்
பட்டங்களை வாங்கி வந்து
பறக்கவிடச் சொல்கிறார்களடி இரத்தினமே !

கிடைத்தவேலையைச் செய்ய விடாமல்
வீட்டுவேலையைச் செய்யச் சொல்லி
நாள்முழுதும் கட்டாயப்படுத்துகிறார்களடி மாணிக்கமே !

பிடித்தவனை விட்டு விட்டு
சொன்னவனைக் கட்டிக் கிட்டு
வாழச்சொல்லி நச்சரிக்கிறார்களடி முத்தாரமே !

முத்தாகப் பிறந்த குழந்தையினை
மூன்றேமாதம் விட்டு விட்டு
சம்பாதிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்களடி செங்கரும்பே !

ஆசைப்பட்ட உடையினை வாங்கியுடுத்தவிடாமல்
வாங்கித் தந்த உடையினை
உடுத்தவேண்டு மென்கிறார்களடிக் கட்டழகே !

பெட்டியிலுள்ள நகையினை அணியக்கூடவிடாமல்
பூட்டுபெரிதாகப் போட்டு வைத்தே
வெளியில் செல்கிறார்களடிப் பொன்னாரமே !

விரும்பிச்சமைத்து வேண்டியதை உண்ணக்கூடவிடாமல்
விரும்பியதைக் கேட்டு சமைக்கச்
சொல்லி உண்கிறார்களடிப் பொற்கிளியே !

பிள்ளைகுட்டிகளைக் கரை சேர்த்து
பேரன் பேத்தி வந்தவுடன்
ஓரமொதுக்கிச் செல்கிறார்களடிச் செல்லழகே !

கணவன் விட்டுச் சென்றவுடன்
கண்ணேமணியாக வளர்ந்த பிள்ளைகள்

ஆசையென்ன? தேவையென்ன? விருப்பப்படி
வாழுங்கள் என்றுக்கூறிச் செல்வதில்

நியாயமென்ன? நீதியென்ன? மிச்சமென்ன?
மீதியென்ன? வாழ்க்கைமுழுதும் பறந்துவிட

உன்சுவாசக் காற்றைச் சுவாசிக்க
இன்னுமென்ன வேண்டு மெனச்
சொல்லடி என் தங்கமேத்தங்கம் !!!

சுதந்திரம் !

தேவியே...


தாயின் தாலாட்டில்
தூளியிலேக் கண்ணுயர்ந்து

வானத்திலே ஒளிவீசும்
நிலாப்பார்த்து அமுதுண்டு

மாக்கோலமிட்ட வாசலில்
அழகழகாய் கிறுக்கலிட்டு

வண்ணக் கரும்பலகையில்
முத்துமுத்தாய் எழுத்துக்களிட்டு

தோழர்களுடன் ஆடிப்பாடிக்
கண்ணாமூச்சி விளையாடிட்டு

தெருவில் விற்போரின்
குரலுக்கு மறுமொழியிட்டு

வேலியிலே ஓடிடும்
ஓணானைக் கல்லாலடித்து

காட்டோரம் பெருகியோடும்
ஆற்றினிலேக் குளியலிட்டு

சாலையிலே வளர்ந்திருக்கும்
பூக்களைப் பறித்திட்டு

பூஞ்சோலையிலேப் பறந்திடும்
பட்டாம்பூச்சியினைத் துரத்திட்டு

வீட்டருகேக் குரைத்திடும்
தெருநாயினை விரட்டிட்டு

பருவத்திலே மழைபொழியும்
மழைநீரிலேக் கப்பலிட்டு

அடுத்தவர்வீட்டுக் கண்ணாடி
ஜன்னலினைப் பந்தாலுடைத்திட்டு

படிப்பினைக் கற்றுக்கொடுக்கும்
ஆசிரியருக்குப் பட்டப்பெயரிட்டு

உடன்பயிலும் சிறுமிகளின்
ஜடைரிப்பனை அவிழ்த்துவிட்டு

கடைவீதிக்குச் செல்கிறேனென
நண்பர்களுடன் அரட்டையடித்திட்டு

திரைப்படம் போவதாகச்சென்றுக்
குமரிகளைக் கிண்டலடித்து

அனுபவித்துப் பறந்துசென்ற சுதந்திரத்தைத்
திரும்பப்பெறுங் காலமெதுவோ அதுவே

மெய்யான சுதந்திரத்திருநா ளென்பதனை
யான் அறிந்திலேன்? பகர்ந்திடுக !

செல்லமே...செல்லம்...!

எண்ணி லடங்காவிண் மீன்களுடன்
ஏற்றமிகு வட்டநிலா வினில்வந்து
காந்தக் கண்களால் மயக்கிக்
காதோர லோலாக்கில் தாலாட்டினாளே !

செந்தாமரை விழிகளால் அம்பிட்டு
செவ்விதழ் ஆரங்களால் முத்தமிட்டு
மாம்பழக் கண்களால் இசையிட்டு
மாதுளை முத்துக்களால் கவிபாடினாளே !

தேவதையாக என்முன் நின்று
தேனாக இன்பம் அளித்தாளே !
நறுமணங் கமழும் சொற்களால்
நல்லுள்ளந் தந்து சென்றாளே !

தோளோடு தோள் சாய
தொடர்ந் தழைத்துச் சென்று
செல்லமேச் செல்லமவள் மேனியுடன்
எனைச் சேர்த்த ணைத்திட்டாளே !

ஐயோ ! வந்தவள் வேறு யாருமல்ல
வலைவீசி மயக்க வந்தவள் தூக்கமே !
அன்பே ! வந்தணைத்திட்டவள் வேறு யாருமல்ல !
இன்பத் தூக்கத்தில் வந்த கனவே !!!

நின் புன்னகையினில்….!

ஆகாயத்தந்தையவன் மடியினில் தவழும்

நிலமகளின் மழலையவள் புன்னகையினால்.!!!

ஆதவனே ! நின்முகம் செங்கமலமாய்

ஆயிரங் கதிர்களுடனே ஒளிவீசிடுமே !

முழுமதியே ! நின்முகம் மங்கலமாய்

மஞ்ச ளழகியாய் பளீச்சிடுமே !

கருமேகமே ! நின்முகம் ஆனந்தமாய்

வான்வெளி யெங்கும் சூழ்ந்திடுமே !

இடியே ! நின்முகம் மத்தளமாய்

எட்டுத்திக்கும் டமாரமாய் முழங்கிடுமே !

மின்னலே ! நின்முகம் ஜோதியாய்

கண்களிடையே மின்னொளியாய் பிரகாசித்திடுமே !

மழையே ! நின்முகம் பகட்டாய்

பார்முழுதும் முத்துச்சாரலாய் பொழிந்திடுமே !

தென்றலே ! நின்முகம் வசந்தமாய்

வனங்கள்தோறும் வானளாவிப் பெருகிடுமே !

மலையே !நின்முகம் பாங்காய்

ஈரேழுலோகங்களையும் மிஞ்சிட உயர்ந்திடுமே !

விழியோரம்....!

எனதுயிரே இன்பத்

தேன் மலரே !

வடிவழகே வண்ணக்

கவித் தமிழே !

குளிர்வீசும் பெருங்

கடல் அலையே !

ஒளிவீசும் அருஞ்

சுடர் ஒளியே !

அரும்புமீசை உன்

எழில் சொல்லுதே !

அழகுமுகம் உந்தன்

கதை சொல்லுதே !

உன்மொழியால் தினம்

அமுதூட்ட வா !

உன்னிசையால் எனைக்

களிப்பூட்ட வா !

விரல்பூக்களால் எந்தன்

உடல்மீட்ட வா !

விழிப்பாக்களால் இன்பக்

கவிபாடி வா !

கண்ணிமைமூடினால் உந்தன்

நினைவெங்கும் மலர்கிறதே !

விழியோரம் துளிநீர்

கொஞ்சம் வழிந்தோடுதே !!!

கொட்டும் மழைதனிலே...!

அந்தி மாலைப் பொழுதினிலே

மாரி பொழியும் வேளைதனிலே

மணக்கும் ஈரமண்ணின் வாசனையிலே

உள்ளம் உவகையால் மகிழ்ந்திடுமே !

குயிலின் இராக இசையினிலே

மயிலின் நடன அழகினிலே

தவளை ஒலிக்கும் சத்தத்தினிலே

காதல் கனிவாய் கசிந்திடுமே !

கொட்டும் மழையும் சிந்தியதே

பேதை உடலும் நடுங்கியதே

விட்டுப் பிரிந்த நாயகனுமே

விரைந்து வந்து அணைத்தானே !

எங்கிருந்தாய்?

இனியவனே !

நீலாம்பரி ராகந்தனில்

உன் தேனிசை ஒலித்திடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !

தெவிட்டா தமுதமாய்

உன் செம்மொழி சுவைத்திடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !

பளிச்சிடும் நீரதனில்

உன் கட்டழகு பார்த்திடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். !

வருடிடும் தென்றலதனில்

உன் பொன்மேனி சிலிர்த்திடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !

கெஞ்சிடும் இமைகளதில்

உன் செவ்விதழ் கொஞ்சிடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !

காத்திருந்த காலம் போதுமென்று

வந்தாயே வசந்தமாய் அருகில்இன்று !

எனதுயிர்ப் பைங்கிளியே

இந்த இன்பமென்றும் திளைத்திடவே

எத்துணை துன்பமும்நான் பொறுத்திருப்பேன்

இத்துணை நாளாய்நீ எங்கிருந்தாய் ?