Sunday, September 26, 2010

பொன்னான பூமி....!

பொன்னான பூமி…!

தமிழகக் கேரள பொது எல்லையாம்

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் சென்று மகிழ்ந்தேனே !

தொலைவில் இருந்து பாடி மகிழும்

சோலைக் குயிலின் கீதம் இரசித்தேனே !

கார்மேகங் கண்டு களிப்புற்றே ஆடும்

வண்ண மயிலின் அழகைக் கண்டேனே !

தென்றலாய் வந்து தேனாய் இசைத்திடும்

தென்மேற்குக் காற்றின் இனிமை கண்டேனே !

செக்கச் சிவந்த இரும்புச் சோளம்

இதழ் விரித்துச் சிரிக்கக் கண்டேனே !

நிலத்தில் மறைந்து விளையும் பயிராம்

நிலக்கடலைச் செடியின் அழகைப் பார்த்தேனே !

கானகமெங்கும் சிறகையடித்துப் பறந்தே திரியும்

பச்சைக் கிளியின் மொழியைக் கேட்டேனே !

துள்ளித் திரிந்து ஓடிச் செல்லும்

புள்ளிமானின் விழிகள் கண்டு வியப்படைந்தேனே !

பசுமைக் கொழிக்கும் மரங்கள் அடர்ந்த

வனத்தைக் கண்டுப் புதுமை பெற்றேனே !

பருவத்தேப் பொழிந்திடும் சாரலைக் கண்டு

பணிந்தே செல்லும் ஓடையைக் கண்டேனே !

உலகமெல்லாம் ஏற்றுமதியாகும் வாசம் மிகுந்த

மலை ஏலக்காயின் நறுமணம் உணர்ந்தேனே !

சில்லெனப் பூத்து சிகப்பாய் விளைந்த

பன்னீர்க் கொய்யாப் பறித்து வந்தேனே !

உயரத்தில் காய்த்த கொடிக்கா மரத்தின்

பழத்தைத் தின்று ருசித்து வந்தேனே !

பெற்றவர் மகிழ்ந்திட பிறந்த ஊராம்

பொன்னான பூமி சென்று வந்தேனே !!!

No comments:

Post a Comment