Sunday, December 26, 2010

புத்தாண்டே...!புதுவரவே...!

புத்தாண்டே...!புதுவரவே...!

தாய்சொல் தட்டிடாமல்
தந்தைசொல் மீறிடாமல்
பெற்றவர்களுக்கோர் பாரமில்லாமல்
விரும்பி மணந்தவனுடன்
ஊரறிய சுற்றம்சூழ
மனமொத்த தம்பதியராய்
மகிழ்ச்சியுடன் இருக்கையிலே!

இருமனம் கலந்து
இல்லறசுகம் பெற்றபோதும்
அம்மாவென் றழைத்திடவே
குழவியெதுவும் இல்லாதநிலையில்
பிள்ளச்சோகம் மறக்கயெண்ணி
ஜவுளிக்கடைப் படியேறி
கணினிப்பெட்டியில் பில்லடித்து
பொழுதைப்போக்கிய வேளையிலே!

மாமன்மாமி மச்சினிச்சியும்
நாத்தனார்நாத்திக் கொடுமையிலும்
பிள்ளைச்செல்வம் இல்லையென
வெள்ளைமன மறியாதோர்
சொல்லும்சுடும் வார்த்தையையும்
சிரித்துப்பேசி மறந்துமே
யாருரைத்த போழ்திலும்
மனசொடிந்து போகாது
அனுசரித்துப் போகையிலே!

தாலிகட்டி மணமுடித்த
மணாளனவன் மலடியென
கூறும்துயர நேரத்திலே!
ஏன்பிறந்தோ மென்றெண்ணி
இதயமொடிந்து போனாளே!

புத்தாண்டு பிறந்தவுடன்
புதுமனிதன் தோன்றிடுவான்!
பிறக்கும்குழவியின் குரல்கேட்டு
கட்டியகணவனும் மகிழ்ந்திடுவான்
திட்டியஉறவுகளும் திருந்திடுமே
என்றேயெண்ணி என்தோழியும்...
காத்திருக்கும் புத்தாண்டே! புதுவரவே...!

No comments:

Post a Comment