Saturday, March 13, 2010

தாயன்பு!

பத்தே மாதங்கள்
பத்திரமாய்ச் சுமந்து
பெற்றெடுத்த செல்வத்தைப்
பார்த்தே மகிழ்ந்தாள்!

தேன் சிந்தும் மழலையின்
குரலினிமைக் கேட்டு
பிஞ்சுக் கண்ணங்களை
முத்தமிட்டே மகிழ்ந்தாள்!

கொஞ்சும் சலங்கைகளின்
ஒலியினில் ஜாலமிட்ட
பாதந்தனை மார்பினிலே
புதைத்து மகிழ்ந்தாள்!

பாலகனின் பசி தீர்த்திடும்
பாலண்ணம் புகட்டியே
பழைய சாதம் மிளகாய்தனை
உண்டே மகிழ்ந்தாள்!

சீரிய முறையில் நூல்களைக் கற்றிட
பாடசாலை அனுப்பியே
வந்ததே வசந்தமென
எண்ணி மகிழ்ந்தாள்!

பட்டப் படிப்பினைக்
கற்றுத் தேர்ந்திட
கல்லூரியில் சேர்த்து
கண்குளிரக் காத்து மகிழ்ந்தாள்!

உழைத்துக் களைத்து
வருபவனின் உள்ளம்
உவகை பொங்கச் செய்திடவே
மணம் செய்வித்தே மகிழ்ந்தாள்!

கண்ணுக்குள்ளே நீர் தங்கி
பிரிய மனம் இல்லையெனினும்
ஆசைமகனின் நோக்கம் எண்ணியே
முதியோர் இல்லம் சேர்ந்து மகிழ்ந்தாள்!!

No comments:

Post a Comment